ஈரோடு, பிப். 10: 8ம் வகுப்பு தேர்வினை தனித்தேர்வர்கள் எழுத இன்று (10ம் தேதி) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனித்தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி மாதம் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் விண்ணப்பிக்க தவறியவர்களுக்காக மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி தட்கல் திட்டம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். தேர்வினை 2020ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியன்று 12.5 வயது பூர்த்தியானவர்களாக இருக்க வேண்டும். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று (10ம் தேதி) முதல் 12ம் தேதி வரை குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.