சென்னை: ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்ததன் மூலம் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற கூட்டணி மேலும் வலுவடையும் என்று திருமாவளவன் தெரிவித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நேற்று மதியம் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து மதுரை புறப்பட்டு சென்றார். முன்னதாக, அவர் அளித்த பேட்டி: ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததின் மூலம், மதச்சார்பற்ற கூட்டணி மேலும் வலுவடையும்’. அவர் முதலமைச்சராக பணியாற்றியவர்.
ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கியவர். அதிமுகவை ஒருங்கிணைத்து, ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் விரும்பியதை நாடு அறியும். ஆனால் அவர் முயற்சி வெற்றி பெற வில்லை. இந்நிலையில் பாஜ போன்ற கட்சிகளில் சேராமல், மீண்டும் தன்னை திராவிட பாசறையில் இணைத்துக் கொண்டது அவர் மீதான நன்மதிப்பை உயர்த்துகிறது. பாஜவுடன் நெருக்கமாக இருக்கிறார்.
பாஜ சொல்படி செயல்படுகிறார் என்ற விமர்சனங்கள் அவர் மீது இருந்தன. ஆனால் இன்று அவர் எடுத்துள்ள முடிவு, அவர் நிதானமானவர், பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் வழி வந்தவர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. திமுக கூட்டணி எங்களை பேச்சுவார்த்தைக்கு 28ம் தேதி அழைத்தனர். ஆனால் அன்று நான் ஊரில் இல்லை.
எனவே வருகிற மார்ச் 2ம் தேதி, சந்திக்கலாம் என்று கூறியிருக்கின்றனர். எனது தலைமையில் இரண்டு அல்லது மூன்று பேர் அந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொள்வோம். அதற்கு தனியாக நாங்கள் குழு அமைக்கவில்லை. திமுக கூட்டணி மெகா கூட்டணி. நிறைய கட்சிகள் இணைந்து கொண்டு இருக்கின்றன. எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து, அந்தந்த கட்சிகளின் வலிமைக்கு தகுந்தாற் போல், முதலமைச்சர் சீட்டுகளை வழங்குவார். இவ்வாறு அவர் கூறினார்.
