வேலூர், பிப்.27: பொதுத்தேர்வு வினாத்தாள் தொடர்பாக தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் கருத்துக்களை மின்னஞ்சலில் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள் இயக்குனர் சசிகலா, அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பிளஸ்2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 2ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வுகளுக்கான வினாத்தாள் தொடர்பாக ஏதேனும் கருத்துகள் இருப்பின் dgequestionpaperqueries@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துகளை தெரிவிக்கலாம்.
கருத்துகள் மின்னஞ்சல் மூலமாகவே தெரிவிக்கப்பட வேண்டும். கேள்வி சரியில்லை என்று பொதுப்படையாக கூறாமல் எந்த கேள்வியில் எது சரியில்லை என்று தெளிவாக குறிப்பிட்டு தெரிவிக்கவும். தேர்வு நடந்த நாள் அன்றே அந்தந்த பாடம் சார்ந்து கருத்துக்களை தெரிவிக்கலாம். இவ்வாறு இல்லாமல் கேள்வித்தாளில் முரண்பாடு தவறு உள்ளது என்று பொதுப்படையாக கூறுவது தவிர்க்கப்பட வேண்டும். மின்னஞ்சல் மூலம் பெறப்படாத எந்த ஒரு கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படாது என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
