நிபந்தனை முன்ஜாமீன் பெற்ற சிஎம்சி டாக்டர் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் ஆஜர் ஈடி அதிகாரிகள் போதை பொருட்கள் பறிமுதல் விவகாரம்

வேலூர், பிப்.21: வேலூர் சிஎம்சி டாக்டர் அறையில் ஈடி அதிகாரிகள் போதை பொருட்கள் பறிமுதல் செய்த வழக்கில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்றுள்ளார். வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் முதுநிலை அறுவை சிகிச்சையாளராக கேரளாவைச் சேர்ந்த டாக்டர் பெல்கிங் பணியாற்றி வருகிறார். இவர் வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள சிஎம்சி ஆண் டாக்டர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி இவருடைய அறையை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அதில், அந்த அறையிலிருந்து 5 வகையான வெளிநாட்டு போதைப்பொருட்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக வடக்கு போலீசார் டாக்டர் பெல்கிங் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள டாக்டரை தேடி வந்தனர். இந்நிலையில் டாக்டர் பெல்கிங் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. மேலும், போலீசார் விசாரணைக்கு ஒத்துழைக்கவும் உத்தரவிட்டது. இந்நிலையில் நிபந்தனை முன்ஜாமீனில் கையெழுத்து போடுவதற்காக வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் டாக்டர் பெல்கிங் நீதிமன்ற உத்தரவுடன் நேற்று ஆஜரானார்.

Related Stories: