புதிய மோட்டார் வாகன சட்டத்தை கண்டித்து சிஐடியூ ஆர்ப்பாட்டம்

சேலம், பிப்.25: ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தை கண்டித்து சேலம் கந்தம்பட்டியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சாலை போக்குவரத்து மோட்டார் தொழிலாளர் சங்கம் சிஐடியூ சார்பில், மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. அதன்படி, சேலம் மாவட்ட சாலை போக்குவரத்து மோட்டார் தொழிலாளர் சங்கம் (சிஐடியூ) சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் கந்தம்பட்டி ஆர்டிஓ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சிஐடியூ மாவட்ட உதவி தலைவர் வெங்கடாபதி தலைமை வகித்து பேசினார். இதில் உயர்த்தப்பட்ட எப்சி, இன்சூரன்ஸ் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். 15 ஆண்டுகால வாகனங்கள் கண்டம் செய்தால், அரசே வங்கி மூலம் புதிய வாகனங்கள் வழங்க வேண்டும்.

எப்சிக்கு வாகனம் செல்லும்போது ஸ்டிக்கர் என்ற பெயரால் பணம் பறிக்கக் கூடாது. ஆன்லைன் அபராதத்தை தடுத்து நிறுத்த வேண்டும். சுங்கச்சாவடி கொள்ளைக்கு முடிவு கட்ட வேண்டும். பெட்ரோல், டீசல், கேஸ் விலைகளை கட்டுப்படுத்த வேண்டும். ஒன்றிய அரசு கொண்டுவந்த, புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை அமல்படுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சாலைப்போக்குவரத்து சங்கத்தின் மாவட்ட செயலாளர் முருகேசன், உதயகுமார், செந்தில்குமார், கோவிந்தன், இளங்கோவன், தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: