கெங்கவல்லி, பிப்.25: ஆத்தூர் அருகே ஸ்கூட்டி மீது பிக்அப் வேன் மோதி கவிழ்ந்த விபத்தில், தேசிய நெடுஞ்சாலையில் அரிசி மூட்டைகள் சிதறியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தம்பாடி பகுதியில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சின்னசேலத்தில் இருந்து சேலம் நோக்கி அரிசி லோடு ஏற்றிக் கொண்டு சென்ற பிக்அப் வாகனம், முன்னால் பெண் ஒருவர் ஓட்டிச்சென்ற ஸ்கூட்டி மீது மோதியது. இதில் சரக்கு வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் டிவைடர் மீது மோதி எதிர் திசையில் சென்று சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சரக்கு வாகனத்தை ஓட்டிச் சென்ற டிரைவர் சுரேஷ், ஸ்கூட்டியில் சென்ற பெண் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தில் பிக்அப் வேனில் இருந்த அரிசி மூட்டைகள் சாலையில் கொட்டியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஆத்தூர் ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
