×

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புதிய டிடீ தடுப்பூசி அறிமுகம்: ஒன்றிய அமைச்சர் ஜே.பி. நட்டா வெளியிட்டார்

புதுடெல்லி: இமாச்சலப் பிரதேச மாநிலம் கசோலியில் உள்ள ஒன்றிய ஆராய்ச்சி நிலையத்தில் டிடி(Tetanus and Adult Diphtheria (Td) தடுப்பூசி தயாரிக்கப்பட்டது. இந்த தடுப்பூசியை அறிமுகம் செய்து வைத்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா கூறியதாவது:இமாச்சல் கசோலியில் உள்ள மத்திய ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஊழியர்களை பாராட்டுவதற்கான தருணம் இது.

அவர்களால்தான் டிடீ தடுப்பூசி தயாரிப்பு சாத்தியமாகி இருக்கிறது. இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு. இந்த தடுப்பூசி, நாட்டின் தேசிய சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், பொது சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் இன்றியமையாத ஒன்றாகும். சுகாதாரம் மற்றும் மருந்துத் துறைகளில் தன்னிறைவை அடைவதற்கான தெளிவான இலக்குகளை பிரதமர் மோடி தலைமையிலான அரசு நிர்ணயித்துள்ளது.

தற்சார்பு பாரதம் எனும் தொலைநோக்குப் பார்வையை நோக்கிய ஒரு உறுதியான நடவடிக்கை இது. உலகளாவிய நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் இந்த டிடி தடுப்பூசி விநியோகிக்கப்படும். வரும் ஏப்ரல் மாதத்துக்குள் 55 லட்சம் டோஸ்களை ஒன்றிய ஆராய்ச்சி நிறுவனம் வழங்கும். அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் மருந்தகமாக இந்தியா பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி தடுப்பூசி தயாரிப்பாளர்களில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய தர வரியைில் இந்தியா முதிர்ச்சி நிலை 3-ஐ அடைந்துள்ளது. தடுப்பூசி தயாரிப்பு என்பது நீண்ட காலம் ஆகும் நடைமுறையைக் கொண்டது.

காசநோய்க்கான மருந்துகள் உருவாக கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆனது. மூளை காய்ச்சல் தடுப்பூசி கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. ஆனால், கோவிட் தொற்றுக் காலத்தில் இந்தியா 9 மாதங்களுக்குள் இரண்டு உள்நாட்டு தடுப்பூசிகளை உருவாக்கி 220 கோடிக்கும் மேற்பட்ட டோஸ்களை வழங்கியது. கோவிட் தடுப்பூசி சான்றிதழ்கள் டிஜிட்டல் முறையில் வழங்கப்பட்டன . இவ்வாறு பேசினார்.

Tags : India ,Union Health Minister ,J.P. Nadda ,New Delhi ,Union Research Institute ,Kasoli, Himachal Pradesh ,Central… ,
× RELATED மோடி உருவபொம்மை எரிப்பு- பரபரப்பு;...