ராய்ப்பூர்: சட்டீஸ்கர் உயர் நீதிமன்றத்தின் சர்ச்சைக்குரிய தீர்ப்பிற்கு நடிகை டொனால் பிஷ்ட் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். சட்டீஸ்கர் மாநில உயர் நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய ஒரு தீர்ப்பில், ஒரு பெண்ணைக் கீழே தள்ளி அமுக்கிப் பிடித்துக் கொண்டு அவர் மீது உடல் ரீதியான உறவு நடக்கவில்லை என்றால் அதனைச் சட்டப்படி பாலியல் பலாத்காரம் என்று கருத முடியாது எனத் தெரிவித்திருந்தது.
இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நேற்று நடிகை டொனால் பிஷ்ட் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இதற்கு எதிராகக் கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். அதில், ‘சட்ட நுணுக்கங்களை விட பாதிக்கப்பட்டவர்களின் மன ரீதியான பாதிப்புகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
பெண்ணின் ஆன்மா உடைந்து போனால் அதற்குச் சிகிச்சை அளிக்க ஏதேனும் மருத்துவமனை இருக்கிறதா?’ இத்தகைய சட்ட வியாக்கியானங்கள் என்னைப் பேச முடியாத நிலைக்குத் தள்ளிவிட்டது. பாதிக்கப்பட்ட பெண்களின் வலியை விட சட்டத்தின் தொழில்நுட்பங்கள் மட்டுமே இங்கே முக்கியமாகக் கருதப்படுகிறது’ என்று அவர் மிகுந்த கவலையுடன் தெரிவித்துள்ளார்.
