சிதம்பரம், பிப். 8: சிதம்பரம் அருகே படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி 2 மீனவர்கள் பலியானார்கள். அவர்களின் உடல்களை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள எம்ஜிஆர் திட்டு கிராமத்தை சேர்ந்த வீரத்தமிழன் (50), தமிழன் (52), குணசேகரன் (60), அப்பு (40) ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் மாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று அதிகாலை அவர்கள் மீன்பிடித்து கொண்டு திரும்பி வரும் போது கடலோர முகத்துவார பகுதியில் எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்தது. இதனால் கடலில் விழுந்த 4 பேரும் உயிருக்கு போராடினர். இவர்களில் குணசேகரன், அப்பு ஆகிய 2 பேரும் நீந்தி கரை சேர்ந்தனர். வீரத்தமிழன், தமிழன் ஆகிய 2 பேரும் கடலில் மூழ்கி மாயமாகினர். இதையடுத்து அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்தது.