நாமக்கல், பிப். 16: நாமக்கல் மோகனூர் சாலையில் சித்தர்மலையில் அமைந்துள்ள ஜோதி கந்த சந்தன மகாலிங்கேஸ்வரர் கோயிலில் நேற்று மகா சிவராத்திரி விழாவையொட்டி, 4 கால சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாமக்கல்லை அடுத்த புத்தூர் சோளீஸ்வரர் கோயிலில் நேற்று சிவராத்திரி விழா நடந்தது. இதில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நாமக்கல், வேலகவுண்டம்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளனமா பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல் நகரில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. ராசிபுரம்: ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகே மிகவும் பழமையான மேற்கு பார்த்த சிவன் கோயில் உள்ளது. நேற்று இரவு மகாசிவராத்திரி விழாவையொட்டி, நான்கு கால பூஜைகளின் முதல் கால பூஜை தொடங்கியது. இதில் சுற்று வட்டாத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், ஆண்டுகளூர்கேட் அருகேயுள்ள மூணு சாவடி சிவன் கோயிலிலும் புதுச்சத்திரம் அருகே கண்ணூர்ப்பட்டி சிவன் கோயில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தது.
