காஞ்சிபுரம்: மகா சிவராத்திரி சிவபெருமானுக்காக விரதம் இருந்து கொண்டாடப்படுவதாகும். ஆண்டுதோறும் மாசி மாத அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அன்று சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கி காரியம் வெற்றி பெற்று கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த வகையில் உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயில், கைலாசநாதர் கோயில் மகாசிவராத்திரி விழா நேற்று நடைபெற்றது.
இதையடுத்து ஏகாம்பரநாதர்-ஏலவார்குழலி அம்பாளுக்கு கைலாசநாதர்-பர்வதவர்த்தினி அம்மன் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், 6,8 கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றறன. இதைத்தொடர்ந்து கச்சபேஸ்வரர், வழக்கறுத்தீஸ்வரர், புண்ணியகோட்டீஸ்வரர், சித்தீஸ்வரர், முத்தீஸ்வரர், பிறவாதீஸ்வரர், இரவாதீஸ்வரர், நகரீஸ்வரர் மணிகண்டீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர், பணம் முடீஸ்வரர், அகத்தீஸ்வரர், லிங்கேஸ்வரர், காசி விஸ்வநாதர், வேதபுரீஸ்வரர், குபேர லிங்கேஸ்வரர் என காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 127 சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி ஆறுகால பூஜைகள் அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு ஆன்மிகச் சொற்பொழிவுகள் நாட்டிய கலைஞர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன.சிவாலயங்களிலும் இரவு முழுவதும் நடைபெற்று சாமி வீதி உலா நடைபெற்றது.
சிவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வாழைமரம் தோரணம் கட்டி பக்தர்கள் சிவபெருமானை வழிபட ஏதுவாக அனைத்து வசதிகளும் நிர்வாகத்தினரால் செய்யபட்டுள்ளது. நேற்று இரவு முதல் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்படுகின்றன. காலை முதலே நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சிவபெருமானை சாமிதரிசனம் மேற்கொண்டனர். மகாசிவராத்திரியை ஒட்டி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம், பிரசாதங்கள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அந்தந்த கோயில் செயல் அலுவலரகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
* மதுராந்தகம் கடப்பேரி வெண்காட்டீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா நேற்று மாலை தொடங்கி இரவு முழுவதும் ஐந்து கால பூஜை நடைபெற்றது. இந்த விழாவையொட்டி கோயில் முழுவதும் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த மகா சிவராத்திரி விழாவில், விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்சி பள்ளி சார்பில் 108 மாணவ மாணவிகளின் பரதநாட்டியம் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் வண்ண உடையணிந்து பரதநாட்டியம், சிவதாண்டவம், பக்தி பாடல்கள், 108 மாணவ மாணவிகள் ஒரே மேடையில் நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விவேகானந்தா பள்ளி குழும தலைவர் லோகராஜ், தலைமை செயல் அதிகாரி மங்கையர்க்கரசி, இணை தாளாளர் ஹரிநாக்சி, முதுநிலை முதல்வர் திலகவதி, முதல்வர்கள் கீதா, சீதா ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
