காஞ்சி, செங்கல்பட்டில் வருவாய்த்துறை சங்கங்கள் மறியல் போராட்டம்

காஞ்சிபுரம், பிப்.11: காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் முன்பு 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. கிராம உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை 200க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை மற்றும் நில அளவைத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டு, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மேலும், தங்களது 9 அம்ச கோரிக்கைகளை அரசு உடனடியாக பரிசீலித்து, தீர்வு காணவில்லை என்றால் அடுத்தக்கட்ட போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என தெரிவித்தனர். இதுகுறித்து, தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து, பின்னர் விடுவித்தனர். இதேபோல் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் செங்கல்பட்டு ராட்டினம் கிணறுபகுதியில் மறியல் போராட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ், பிரபு, ரமேஷ், செந்தில் குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் தலைவர்கள் லோகநாதன், வெங்கட்ராமன், தமிழ்நாடு அரசு பள்ளி சட்டத்தின் மாவட்ட செயலாளர் வசந்தகுமார் உள்ளிட்டோர் பேசினர். முடிவில் சங்கத்தின் மாநில செயலாளர் விக்டர், சுரேஷ்குமார் ஆகியோர் பேசினர்.

Related Stories: