திருச்செங்கோடு:திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு வந்த தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் மகளிர் உதவித்தொகை ரூ.5 ஆயிரம் வழங்கியுள்ளார். இது எங்களுக்கு மகிழ்ச்சி தான். பெண்களுக்கு கிடைக்கும் உதவியை நாங்கள் வரவேற்கிறோம். விஜய்யின் ஒவ்வொரு கூட்டத்திலும் ஏதாவது ஒரு சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது என்று ேகட்கிறீர்கள். விஜய்யை நேரில் பார்க்கவேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். நாங்கள் அனுமதி சீட்டு கொடுத்துதான் நிர்வாகிகளை உள்ளே வர அனுமதித்தோம். போலீசார் ஒவ்வொருவரையும் பரிசீலித்துதான் உள்ளே அனுப்பினார்கள்.
ஆனாலும் அவர்(இறந்தவர்) எப்படி உள்ளே வந்தார். எந்த அனுமதி சீட்டில் வந்தார் என்பது தெரியவில்லை. அவர் மயக்கமடைந்ததை கேள்விப்பட்டவுடன் நாங்கள் ஏற்பாடு செய்திருந்த முதலுதவி குழுவின் மூலம் முதலுதவி செய்து, எங்கள் ஆம்புலன்ஸ் மூலம்தான் கொண்டு சென்றோம். ஏற்கனவே அவர் ஆஞ்சியோ செய்துள்ள நிலையில் மயக்கம், படபடப்பு இருந்ததாக கூறப்படுகிறது. அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்ய தமிழக வெற்றி கழகம் தயாராக உள்ளது. மாவட்ட செயலாளர் மூலம் விசாரித்து வருகிறோம். இவ்வாறு கூறினார்.
