ராஜ்யசபா சீட் தர்றேன்னு சொன்னாருல… இந்தாங்க ஆதாரம்; நம்பிக்கை துரோகி எடப்பாடி: வெளுத்து வாங்கிய பிரேமலதா

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக மற்றும் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று அவர் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, அவர் அளித்த பேட்டி: விருத்தாச்சலம் தொகுதியில் நாளை (இன்று) வேட்புமனு தாக்கல் செய்கிறேன். தொடர்ந்து அங்கு இரண்டு நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருக்கிறேன். அதை தொடர்ந்து, வழக்கம்போல என்னுடைய பிரசார பயணம் தொடரும். திமுக கூட்டணி 200 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறும். மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பது உறுதி. அண்ணாமலையார் கோயிலில் இருந்து சொல்கிறேன் எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்ணியமான வார்த்தைகளை பேச வேண்டும். மற்றவர்கள் மதிக்கக் கூடிய வகையில் அவரது பேச்சு இருக்க வேண்டும். மூன்றாம் தர, நான்காம் தர பேச்சாளர்களைப் போல பேசுவது கண்டிக்கத்தக்கது. மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வரும்போது இப்படி பேசுவதற்கான பலனை நிச்சயம் எடப்பாடி அடைவார்.

முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றிய சாதனைகளையும், திட்டங்களையும், தொகுதிக்கு என்ன செய்யப் போகிறோம் என்பதையும் சொல்லி நாங்கள் ஓட்டு கேட்கிறோம். அரை சதவீத ஓட்டு என எடப்பாடி பேசுகிறார். அவருக்கு ஏன் வயிறு எரிகிறது. வயிற்றெரிச்சலில் கருகுவது எங்களுக்கு தெரிகிறது. அதிமுக என்டிஏ கூட்டணியில் தானே 2011 முதல் 2026 வரை இருந்தோம். அவர்களுடன் இருக்கும் போதெல்லாம் எங்கள் அருமை அவர்களுக்கு தெரியவில்லை.
மரியாதை காரணமாக, கண்ணியத்தின் காரணமாக நான் இதுவரை காண்பிக்காத ஆவணத்தை இந்த கோயிலில் இருந்து தெரிவிக்கிறேன். எங்களுக்கு ராஜ்யசபா சீட்டு தருவதாக எடப்பாடி பழனிசாமி கையெழுத்து போட்டு கொடுத்திருக்கிறார். 5 எம்பி, ஒரு ராஜ்யசபா என இரு தரப்பிலும் கையெழுத்துப் போட்ட ஆதாரம் இதோ என்னிடம் இருக்கிறது. கடந்த 2024 தேர்தலில் அவர் கையெழுத்து போட்டு கொடுத்தார். ஆனால், நான் கையெழுத்து போட்டுக் கொடுக்கவில்லை என்று இப்போது பேசுகிறார். 2025ல் அவர் ராஜ்யசபா கொடுக்கவில்லை. கையெழுத்து போட்ட படிவத்தில் எந்த ஆண்டு என குறிப்பிடவில்லையே என கேட்டதற்கு, எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்திலிருந்து இந்த நடைமுறைதான் உள்ளது என்றார். என் வார்த்தை முக்கியம் அதை நம்புங்கள் என்று சொன்னார்.

நம்பிக்கைக்கு புறம்பாக பேசுகிறார். நம்பிக்கை துரோகம் செய்திருக்கிறார். எங்களுக்கும் கீழ்த்தரமாக பேசத் தெரியும். ஆனால், அரசியலில் நாங்கள் மரியாதையாக நடந்து கொண்டிருக்கிறோம். அண்ணா வழியில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என நடந்து கொண்டிருக்கிறோம். கேப்டன் எங்களை அப்படித்தான் வழி நடத்தி இருக்கிறார். ஐசியுவில் இருந்த கட்சி என்கிறார். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும் கடைகோடி தொண்டர்களும் எடப்பாடி பேசுவதை ஏற்கவில்லை. எடப்பாடி தவறு செய்து விட்டார் என அதிமுகவினர் சுட்டிக் காட்டுகின்றனர். வரும் மே 4ம் தேதி ரிசல்ட் வரும்போது ஐசியுக்கு எடப்பாடி பழனிசாமி போகாமல் இருக்க வேண்டும் என கடவுளை வேண்டிக் கொள்கிறேன். அன்புமணி தவறாக பிரசாரம் செய்கிறார். சாதியையும் குடும்பத்தையும் இழுக்கிறார். எடப்பாடியும், அன்புமணியும் இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். கீழ்த்தரமான அரசியல் செய்வதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இதே போக்கு தொடர்ந்தால் எங்கள் தரப்பில் இருந்தும் கடும் விமர்சனம் உறுதியாக வரும். இவர் அவர் தெரிவித்தார்.

 

Related Stories: