அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் ஏப்ரல் மாதம் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த பணிகள் தொடங்கியுள்ளது. இது குறித்து மாநில அரசு நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வீட்டுப்பட்டியல் செயல்பாடு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் நடைபெறும். இரண்டாவதுகட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வீட்டுப்பட்டியல் நடவடிக்கைக்கான களப்பணி வருகின்ற ஏப்ரல் 20ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை நடத்தப்படும். களப்பணி தொடங்குவதற்கு முன்பு ஏப்ரல் 5ம் தேதி முதல் 19ம் தேதி வரை 15 நாட்களுக்கு சுய கணக்கெடுப்பு பயிற்சி நடத்தப்படும். சுய கணக்கெடுப்பு காலத்தில் குடியிருப்பாளர்கள் தங்களது தகவல்களை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்க வாய்ப்பு கிடைக்கும். இதனை தொடர்ந்து பயிற்சி பெற்ற கணக்கெடுப்பாளர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று முறையான முறையில் தகவல்களை சேகரிப்பார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சேகரிக்கப்படும் அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
