மும்பை: மகாராஷ்டிர தலைமைச் செயலகமான மந்திராலயாவில் மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை(எப்டிஏ) கிளார்க் ராஜேந்திர தரங்கேயிடம், நபர் ஒருவர் தனது மருத்துவ சான்றிதழை புதுப்பிக்க அணுகினார். அவரிடம் கிளார்க் ரூ.50,000 லஞ்சம் கேட்டார். பேரத்தை தொடர்ந்து ரூ.35,000 தர சம்மதித்த அந்த நபர், லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கொடுத்த அறிவுறுத்தலின்பேரில், ரூ.35,000 லஞ்ச பணத்தை அந்த நபர், கிளார்க் தரங்கேயிடம் கொடுத்தார். இதையடுத்து அங்கு மறைந்திருந்த போலீசார், தரங்கேயை கையும் களவுமாக கைது செய்தனர். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக வெளியான தகவலை அமைச்சர் நர்கரி ஜிர்வால் மறுத்திருந்தார். இந்நிலையில் இதுபற்றி மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கல் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அமைச்சர் நர்கரி ஜிர்வாலின் அலுவலகத்தில் வைத்து லஞ்சம் வாங்கிய வழக்கில், கைது செய்யப்பட்ட கிளார்க் ராஜூ தரங்கேவும், புகார்தாரர் ஒருவரும் தங்கள் வாக்குமூலங்களில், ஒரு மூத்த அதிகாரியின் உத்தரவின் பேரில் மட்டுமே லஞ்சம் வாங்கப்பட்டதாகக் கூறியுள்ளனர். இந்த மூத்த அதிகாரி அமைச்சர் ஜிர்வாலின் தனிச் செயலாளர் என்பது உண்மையா? அப்படியானால், இந்த தனிச் செயலாளரை எப்போது கைது செய்வீர்கள்?, என சப்கல் கேள்வி எழுப்பி உள்ளார்.
தலைமை செயலகத்தில் ரூ.35 ஆயிரம் பணத்துடன் கைது மகாராஷ்டிரா அமைச்சருக்கு தொடர்பா? கிளார்க் சிக்கிய விவகாரத்தால் பரபரப்பு
- மகாராஷ்டிரா
- மும்பை
- ராஜேந்திர தரங்கே
- மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம்
- FDA
- மகாராஷ்டிரா செயலகம்
- மந்த்ராலயா
