அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான சி.விஜயபாஸ்கர் பேசியதாவது: என்ன கொடுத்தாலும் வாங்கி கொள்வோம். ஆனால் வாக்கு இரட்டை இலைக்குத்தான், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான். கஷ்டப்பட்டு ஆர்ப்பாட்டம் எல்லாம் நடத்த வேண்டாம். நாங்கள் சரியாக தான் இருக்கிறோம் என்று மக்கள் கூறுகின்றனர். இதேபோல் பக்கத்து வீடு, அடுத்த வீடு, முன்னே உள்ள வீடு, பின்னே உள்ள வீடுகளில் உள்ள ஆத்தாக்களை எல்லாம் கரெக்ட் செய்து விடுங்கள்…. கபக்கென்று அமுக்கி போட்டு விடுங்கள்…. இல்லையென்றால் தலையணை வைத்து முடித்து விடுங்கள்…. நான் கணக்கு வழக்குகளை சொன்னேன், வேறு எதுவும் நினைத்து கொள்ள வேண்டாம். இவ்வாறு விஜயபாஸ்கர் பேசினார்.
* மகளிருக்கு ரூ.5000: தவெக ஹேப்பி
திருச்செங்கோட்டில் தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் மகளிர் உதவித்தொகை ரூ.5,000 வழங்கியுள்ளார். இது எங்களுக்கு மகிழ்ச்சி தான். பெண்களுக்கு கிடைக்கும் உதவியை நாங்கள் வரவேற்கிறோம். விஜய்யின் ஒவ்வொரு கூட்டத்திலும் ஏதாவது ஒரு சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது என்று ேகட்கிறீர்கள். விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். நாங்கள் அனுமதி சீட்டு கொடுத்து தான் நிர்வாகிகளை உள்ளே வர அனுமதித்தோம். போலீசார் ஒவ்வொருவரையும் பரிசீலித்து தான் உள்ளே அனுப்பினார்கள். ஆனாலும் அவர்(இறந்தவர்) எப்படி உள்ளே வந்தார். எந்த அனுமதி சீட்டில் வந்தார் என்பது தெரியவில்லை.
அவர் மயக்கமடைந்ததை கேள்விப்பட்டவுடன் நாங்கள் ஏற்பாடு செய்திருந்த முதலுதவி குழுவின் மூலம் முதலுதவி செய்து, எங்கள் ஆம்புலன்ஸ் மூலம் தான் கொண்டு சென்றோம். ஏற்கனவே இவர் ஆஞ்சியோ செய்துள்ள நிலையில் மயக்கம், படபடப்பு இருந்ததாக கூறப்படுகிறது. அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்ய தவெக தயாராக உள்ளது. மாவட்ட செயலாளர் மூலம் விசாரித்து வருகிறோம். சேலம் கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள், கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாட்டின் காரணமாக ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இனிமேல் முழுமையாக தவிர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
