பாட்னா: பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இந்த தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான தேஜ கூட்டணி அமோக வெற்றி பெற்றது. நிதிஷ்குமார்(75) தொடர்ந்து 10 வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றார். பாஜ கட்சியை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்கா ஆகியோர் துணை முதல்வராகினர்.முதல்வராக பதவியேற்று 3 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், நிதிஷ்குமார், முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டு எம்பியாகிறார் என்றும் அவரது மகன் நிஷாந்த்குமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்குவதற்கு பாஜ முடிவு செய்துள்ளது என்றும் நேற்று தகவல்கள் வெளியானது. இது மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை நிதிஷ் குமார் வெளியிட்டுள்ளார். அதில், “எனது நாடாளுமன்ற பயணத்தின் தொடக்கத்திலிருந்தே, பீகார் சட்டமன்றத்தின் இரு அவைகளிலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக வேண்டும் என்ற ஆசை என் இதயத்தில் இருந்து வருகிறது. இந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், இந்த முறை நடைபெறும் தேர்தலில் மாநிலங்களவை உறுப்பினராக விரும்புகிறேன். உங்களுடனான எனது உறவு எதிர்காலத்திலும் தொடரும் என்றும், வளர்ந்த பீகாரை உருவாக்க உங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான எனது உறுதிப்பாடு உறுதியாக இருக்கும் என்றும் முழு நேர்மையுடன் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். அமைக்கப்படும் புதிய அரசாங்கத்திற்கு எனது முழு ஒத்துழைப்பும் வழிகாட்டுதலும் இருக்கும்,” என பதிவிட்டுள்ளார்.
