திருச்சி ரயில்வே அலுவலகத்தில் இந்தி திணிப்பு மையால் அழித்து திமுக போராட்டத்தால் அகற்றம்

திருச்சி: திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக நுழைவு வாயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய அலங்கார ஆர்ச் ஒன்று கட்டப்பட்டது. இந்த நுழைவு வாயிலில் ரயில்வே நிர்வாகம் தரப்பில் பெயர் பலகை ஒன்று அமைக்கப்பட்டது. அதில், கடமையின் நுழைவு வாயில் என்ற பொருள்படும்படியான ‘கர்தவ்ய த்வார்’ என்ற வார்த்தை முதலில் தமிழ் மொழியிலும், நடுவில் இந்தி மொழியிலும், அடுத்ததாக ஆங்கில மொழியில் அதே போன்றும் எழுதப்பட்டிருந்தது. இந்த படம் நேற்று சமூகவலைதளங்களில் வைரலானது. ரயில் நிலையத்தில் இந்தி திணிப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜ மூத்த தலைவர் தமிழிசை, மதுரை எம்பி சு.வெங்கடேசன் ஆகியோ கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி தலைமையில், மாநகர மேயர் அன்பழகன், மாநகர நிதிக்குழு தலைவர் முத்துசெல்வம் உள்ளிட்ட திமுகவினர், திருச்சி ரயில்வே ஜங்சனில் குவிந்தனர். ஒன்றிய அரசுக்கு எதிராகவும், ரயில்வே நிர்வாகத்துக்கு எதிராகவும் கடுமையான கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிதாக திறக்கப்பட்ட நுழைவுவாயில் நினைவு திறப்பு குறித்த கல்வெட்டில், எழுதியிருந்த இந்தி வாசகத்தை மை கொண்டு அளித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இவர்களுடன் தமிழ் ஆர்வலர்களான பொதுமக்களும் சேர்ந்து கல்லால் அடித்து கல்வெட்டை அகற்ற முயன்றனர். இதனால் ரயில்வே நிர்வாகம், உடனடியாக ஊழியர்களை கொண்டு நுழைவு வாயிலில் பொறிக்கப்பட்டிருந்த வாசங்களை கழட்டி அப்புறப்படுத்தினர்.

* அகற்றப்பட்டது ஆதிக்க வெறியின் ஆணவம் முதல்வர் பதிவு
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ்தள பதிவு: அகற்றப்பட்டது இந்தி எழுத்துகள் மட்டுமல்ல, ஆதிக்க வெறியின் ஆணவமும் தான், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிப் போலித் தமிழ்ப்பற்று காட்டுபவர்களும் – அடிமைத்தனத்தின் அடையாளமாய் அவர்களுக்குத் துணை நின்று தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைப்போரும் தமிழ்நாட்டு மக்களால் அகற்றப்படுவார்கள். டெல்லியின் ஆணவத்துக்குத் தமிழ்நாடு என்றைக்குமே அவுட் ஆப் கன்ட்ரோல் (Out Of Control) தான். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Related Stories: