புதுச்சேரி, பிப். 13: புதுச்சேரி வில்லியனூர் காவல் நிலைய போலீசார் தமிழ்மாறன் மற்றும் புருஷோத்தமன் ஆகியோர் சம்பவத்தன்று இரவு கூடப்பாக்கம் மெயின் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் லாரி ஒன்று வேகமாக வந்தது. இதையடுத்து லாரியை போலீசார் நிறுத்தி விசாரித்தனர். அதில், ஓட்டுநர் விழுப்புரம் மாவட்டம் பக்கிரிபாளையம் பகுதியை சேர்ந்த தியாகராஜ்(30) என்பது தெரியவந்தது. மேலும், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே சந்தேகமடைந்த போலீசார் லாரியை சோதனை செய்தனர். அப்போது, லாரியில் மணல் இருந்தது. இது குறித்து போலீசார் விசாரித்தபோது, ஆற்றுப்படுக்கை மற்றும் வயல் வெளிகளில் மணலை யாருக்கும் தெரியாமல் திருடி விற்பனை செய்து வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து காவலர் தமிழ்மாறன், வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து தியாகராஜை கைது செய்தனர். மேலும் லாரியை பறிமுதல் செய்தனர்.
