இனபெருக்கத்துக்காக வரும் வெளிநாட்டு பறவைகள்; குமரியில் பறவைகள் கண்காணிப்பு கோபுரங்கள் பராமரிக்கப்படுமா?

நாகர்கோவில்: குமரி மாவட்டம் நான்கு நிலங்களை கொண்டவையாகும். குறிப்பாக நீர்நிலைகள் அதிகமாக காணப்படுகிறது. இதனால் குளிர்காலங்களில் வெளிநாட்டில் இருந்து பறவைகள் உணவு தேடியும், இனப்பெருக்கத்திற்கும் வருகிறது. ஆகவே தேரூர், மாணிக்கம்புத்தேரி, சுசீந்திரம், வேம்பனூர் உள்பட பல குளங்களை பறவைகள் சரணாலயமாக வனத்துறை அறிவித்து பாதுகாத்து வருகிறது.

இந்த குளங்களுக்கு கூட்டம் கூட்டமாக பறவைகள் வந்து கூடுகட்டி குஞ்சு பொறித்து செல்வதை நாம் பார்க்க முடிகிறது. நாகர்கோவில் மையப்பகுதியில் உள்ள சுசீந்திரம் பெரிய குளத்தில் பறவைகள் அமரும் வகையில் குளத்தின் நடுவே பெரிய திட்டுடன், மரங்கள் வளர்ந்து இருப்பது சிறப்பு. இங்கு வரும் பறவைகளை பார்க்க குளத்தின் கரையில் 2 இடங்களில் பறவைகள் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தேரூர் குளம், மாணிக்க புத்தேரி குளக்கரையிலும் பறைவகைள் கண்காணிப்பு கோபுரங்கள் உள்ளது. சுசீந்திரம் பெரிய குளத்தின் கரையில் உள்ள பறவைகள் கண்காணிப்பு கோபுரங்கள் கடந்த 2014ம் தேதி பொதுமக்கள் பார்த்து ரசிக்கும் வகையில் திறக்கப்பட்டது. தற்போது போதிய பராமரிப்பு இல்லாமல் இந்த கண்காணிப்பு கோபுரங்கள் உள்ளன.

நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வந்து அமர்ந்து பறவைகள், இயற்கையை ரசித்து பார்க்கும் வகையில் சுசீந்திரம் பதினெட்டாம்படி பகுதியில் கண்காணிப்பு கோபுரம், இருக்கை அமைத்து கொடுத்துள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுசீந்திரம் குளம் முடியும் இடத்தில் காக்குமூரில் இருந்து வரும் சாலை சுசீந்திரம் பெரிய குளக்கரையில் வந்து சேரும் இடத்தில் ஒரு கண்காணிப்பு கோபுரம் உள்ளது.

இந்த கோபுரதின் கீழ் பகுதியில் உள்ள அறை 24 மணி நேரமும் திறந்தே காணப்படுகிறது. மேல் பகுதிக்கு செல்லும் வழியும் திறந்துள்ளது. இதனை தவிர கண்காணிப்பு கோபுர கட்டிடமும் பழுதாகி உள்ளது. பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை காண முடிகிறது. அந்த கண்காணிப்பு கோபுரம் இருக்கும் இடம் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதி. ஆனால் வாகனங்கள் மட்டுமே சென்று வருகிறது. இதனால் இரவு நேரங்களில் கண்காணிப்பு கோபுரத்தின் கீழ் பகுதியில் உள்ள அறை மற்றும் மேல் பகுதியில் சமூகவிரோத செயல்கள் நடப்பதற்க்கு வாய்ப்பாக உள்ளது. இதனை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கோபுரத்தின் கீழ் பகுதியில் உள்ள அறையை பூட்டி வைப்பதோடு, வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் தினமும் கண்காணிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: