ஆரணி, பிப்.4: புயலால் பாதித்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி ஆரணியில் விவசாயிகள் கையில் எலிகளுடன் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாநில தலைவர் புருஷேத்தமன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சம் விவசாயிகளில் 25 ஆயிரம் பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கியுள்ளனர். மீதமுள்ளவர்களுக்கும் அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். பேரிடர் நிவாரண நிதி விதிகளை திருத்துவதற்கு மத்திய பேரிடர் நிவாரண பிரிவு இணை செயலாளர் தலைமையில், அனைத்து மாநில செயலாளர்கள் அடங்கிய குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். புயல் பாதிப்புகளை மத்திய பார்வை குழு ₹3,200 கோடி பயிர் சேதம் மதிப்பீடு செய்து, எக்டருக்கு ₹13,500 ஒதுக்கியுள்ளதை, நெற்பயிர்களுக்கு எக்டருக்கு ₹40 ஆயிரம், வாழை பயிர்களுக்கு ₹1 லட்சம், புஞ்சை, மானாவரி பயிருக்கு ₹30 ஆயிரம் ஒதுக்க வேண்டும்.