நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

கிருஷ்ணகிரி, ஜன.28: அந்தேவனப்பள்ளியில் நாளை(29ம் தேதி) நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி வட்டாரம் அந்தேவனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை(29ம் தேதி) நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நடக்கிறது. இந்த முகாமில் பொதுமக்களுக்கு தேவையான ரத்த பரிசோதனை, கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை, எக்ஸ்ரே, இ.சி.ஜி, எக்கோ, அல்ட்ரா சவுண்டு மற்றும் கண் பரிசோதனை, மகப்பேறு மருத்துவம் போன்ற 17 வகையான சிறப்பு நிபுணர்களைக் கொண்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. முகாமிற்கு வரும் பொதுமக்களுக்கு முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அட்டை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள், தொழிலாளர்களுக்கு இலவச அடையாள அட்டை வழங்கப்படுகிறது. பொதுமக்களுக்கு இலவசமாக உடல் பரிசோதனைகள், இருதய பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த முகாமில் தொற்றா நோய், உயர் ரத்த அழுத்தம், கண் பார்வை பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, இதய பரிசோதனை மற்றும் நரம்பியல் சித்த மருத்துவம், பெண்களுக்கான மார்பக புற்றுநோய் பரிசோதனை, பல் சிகிச்சை உள்பட 17 வகையான சிறப்பு மருத்துவர்கள் மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: