புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த ஒன்றிய அரசின் உண்மையான நோக்கம் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில்,”சாதிவாரி கணக்கெடுப்பை கோருபவர்கள் அனைவரும் நகர்ப்புற நக்சல்கள் மனப்பான்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என்று பிரதமர் குற்றம்சாட்டினார். ஆனால் காங்கிரஸ் கொடுத்த நெருக்கடியால் அடிபணிந்த பிரதமர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்புடன் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இப்போது மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வீட்டு பட்டியல் மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு அட்டவணையில் இடம்பெறுபவை குறித்து மோடி அரசு அறிவித்துள்ளது.
அதில் 12வது கேள்வியில் குடும்பத் தலைவர் பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடி அல்லது மற்ற பிரிவுகளை சேர்ந்தவரா என்று கேட்கிறது.ஓபிசி மற்றும் பொதுப்பிரிவுகளை வெளிப்படையாக கேட்கவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு 2027ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக இருக்கப்போவதால் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள கேள்வி அரசின் உண்மையான நோக்கங்கள் மற்றும் ஒரு விரிவான, நியாயமான, நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பிற்கான அதன் அர்ப்பணிப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகின்றது சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளின் விவரங்களை இறுதி செய்வதற்கு முன்பு உடனடியாக அரசியல் கட்சிகள், மாநில அரசுகள் மற்றும் பொதுமக்கள் சமூக அமைப்புக்களுடன் கலந்துரையாட வேண்டும் என்று அரசை காங்கிரஸ் வலியுறுத்துகின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.
