நாயை கிணற்றில் குளிப்பாட்ட சென்ற இளைஞர் சடலமாக மீட்பு

வேலூர், ஜன.24: காட்பாடி அருகே நாயை கிணற்றில் குளிக்க வைக்க சென்ற இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காட்பாடி அடுத்த சேவூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சிவமாணிக்கம். இவருடைய மகன் நவீன்குமார் (25) இவர் நேற்று முன்தினம் காலை வீட்டில் வளர்த்து வரும் நாயை குளிக்க வைப்பதற்காக எடுத்து சென்றார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடி வந்த நிலையில் சேவூரில் ஒருவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கிணற்றில் இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று முன்தினம் இரவு தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சடலத்தை மீட்டனர். அப்போது அவர் காணாமல் போன நவீன்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளைஞர் எப்படி இறந்தார்? என்பது குறித்து பிரம்மபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: