கடலூர், ஜன. 28: பண்ருட்டி அருகே உள்ள திருவதிகையை சேர்ந்தவர் மணிகண்டன்(40). இவர் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று கடலூர் மார்க்கெட் பகுதியை சேர்ந்த ராமசாமி(31) என்பவர், தனது மனைவி ரம்யாவுக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும், அதனால் குழந்தையை பார்க்க வார்டுக்குள் செல்ல அனுமதிக்கும்படி மணிகண்டனிடம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு மணிகண்டன், பார்வை நேரம் முடிந்து விட்டது, அதனால் அனுமதிக்க முடியாது என கூறினார். இதில் ஆத்திரமடைந்த ராமசாமி, குப்பங்குளத்தை சேர்ந்த விக்ரம், ராக்கி ஆகியோருடன் சேர்ந்து மணிகண்டனை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமசாமி, விக்ரம், ராக்கி ஆகியோரை கைது செய்தனர்.