குன்னூர், ஜன.27: குன்னூர் அருகே சிம்ஸ் பார்க் செல்லும் சாலையில் வாகனத்தில் அடிபட்டு குரங்கு இறந்தது. நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் காடுகளை கொண்டுள்ளதால் இங்கு பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. குறிப்பாக குரங்குகள் அதிகளவில் உள்ளன. குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சாலையில் செல்லக்கூடிய சுற்றுலா பயணிகள் குரங்குகளுக்கு உணவளிப்பதால் அவை சாலையிலே அமர்ந்து விடுகின்றன. இதனால் அவ்வப்போது சாலையில் செல்லும் வாகனங்களில் அடிபட்டு இறந்துவிடுகின்றன. இதனை தடுக்க வனத்துறையினர் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டும் எவ்வித பயனும் இல்லை. சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி நீலகிரியில் உள்ள பொதுமக்களும் தொடர்ந்து குரங்குகளுக்கு உணவளித்து வருகின்றனர்.