சீர்காழி, ஜன.5: சீர்காழி அருகே கீழையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கீழையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மயிலாடுதுறை அறம் செய், செம்பனார்கோயில் புவி காப்பு அறக்கட்டளையோடு இணைந்து பூம்புகார் பனை அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
பூம்புகார் பனை அறக்கட்டளை நிறுவனர் முனைவர் ரவீந்திரன் மரம் நடும் பணியை தொடங்கி வைத்து பேசுகையில், உலகத்தின் ஒட்டுமொத்த ஆதாரமாக விளங்கக்கூடிய மரங்களை நாம் பாதுகாத்து வளர்த்தால் மரங்கள் நம்மை பாதுகாக்கும். நம்முடைய அனைத்து தேவைகளுக்கும் மரங்கள் உதவி செய்கின்றன. இந்த உலகம் மரங்கள் இல்லாமல் இல்லை என்பதை நாம் உணர்ந்து அனைவரும் முடிந்தவரை மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும் என்றார். விழாவில் மருத்துவர், செவிலியர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
