நாகர்கோவில், ஜன.24: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்கள் சொந்த ஊரிலேயே சுயதொழில் தொடங்குவதன் மூலம் அவர்கள் வேலைவாய்ப்புகளை தேடி நகர்ப்புறப் பகுதிகளுக்கு குடிபெயர்வதை தடுக்கவும், ஊரக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தமிழக அரசு பல்வேறு சுயதொழில் கடன் திட்டங்களை மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் சிறப்பு வாய்ந்த ஒரு திட்டம் ‘புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம்” (நீட்ஸ்) ஆகும். இத்திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு, பட்டயபடிப்பு, தொழிற்கல்வி சான்றிதழ் பெற்ற 21 வயது முதல் 45 வயது வரையுள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையான திட்டங்களுக்கு வங்கி கடன் பெற்று தொழில் தொடங்கலாம். திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும்.