தமிழ்நாடு முதலமைச்சரின் திறமை தேடல் தேர்வு விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு திறமைத் தேடல் கல்வி உதவித்தொகை திட்டமாக தமிழ்நாடு முதலமைச்சரியின் திறமைத் தேடல் தேர்வு செயல்படுத்தப்படுகிறது. அரசு தேர்வுகள் இயக்ககம் மூலம் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதில் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள் இடம்பெறுவார்கள். தேர்வாகும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 என்ற விதம் ஒரு கல்வி ஆண்டிற்கு ரூ.10,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக தலைமை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன்படி 2025-26ம் கல்வி ஆண்டிற்கான இத்தேர்வு அறிவிப்பு வெளியாகி விண்ணப்ப பதிவு நடைபெற்று வந்த நிலையில், அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசுத்தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘நடப்பாண்டு தமிழ்நாடு முதலமைச்சரின் திறமை தேடல் தேர்வு ஜனவரி 31ம் தேதி நடைபெற உள்ளது. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் (ஜன.3) நிறைவடைந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி இக்கால அவகாசம் வரும் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது’’ என குறிப்பிட்டுள்ளது.

Related Stories: