மது குடிக்க பணம் தராததால் மூதாட்டியை கொலை செய்த பேரன் அதிரடி கைது

கடலூர், டிச. 31: கடலூர் அருகே வி.காட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணி மனைவி சின்ன பொண்ணு(75). இவர்களுக்கு 3 மகன்கள், 1 மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. 3 மகன்களும் அருகருகே வீடு கட்டி வசித்து வருகின்றனர். மணி கடந்தாண்டு உயிரிழந்த நிலையில், சின்னபொண்ணு மட்டும் கூரை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 2 மாதத்திற்கு முன் இவரது பேரன் ராஜப்பிரியன், இவரிடம் இருந்த தங்க கம்மலை வாங்கி சென்று ரூ.10,500க்கு அடகு வைத்துள்ளார். அதை ராஜப்பிரியன் மீட்டு தராததால் சின்னப்பொண்ணுவே ரூ.10,500 பணம் கொடுத்து மீட்க சொன்னதாகவும், அப்போதும் மீட்டு தராததால் சின்னப்பொண்ணு கடந்த 27ம் தேதி ராஜப்பிரியனிடம் இதை கேட்டு திட்டியுள்ளார்.

அப்போதிலிருந்து சின்னப்பொண்ணுவை காணவில்லை. இந்நிலையில் நேற்றுமுன்தினம் சின்னப்பொண்ணுவின் வீடு பூட்டி இருந்ததால், அவரது மற்றொரு பேரன் சதீஷ், அவரது தாய் தனவல்லி ஆகியோர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, எலி செத்த துர்நாற்றம் அடித்ததாகவும், அதனால் அவர்கள் வந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை சின்ன பொண்ணுவின் மற்றொரு பேரன் குணசேகரன் சென்று பார்த்தபோது, மரப்பெட்டியில் ரத்தம் கசிந்ததால் திறந்து பார்த்துள்ளார். அதில் சின்னபொண்ணு இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில், டிஎஸ்பி தமிழ் இனியன், இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் வெற்றி வரவழைக்கப்பட்டு சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஓட விடப்பட்டது. அது அருகில் உள்ள உயிரிழந்த சின்னபொண்ணு கடைசி மகனான சுப்பிரமணியன் வீட்டிற்கு சென்றது. இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சுப்பிரமணியின் மகன் ராஜப்பிரியன்(22) அடிக்கடி சின்னபொண்ணுவிடம் குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். எனவே சின்ன பொண்ணுவை அவரது பேரனான ராஜப்பிரியன் கொலை செய்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

பின்னர் ராஜப்பிரியனை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், பணத்திற்காக தனது பாட்டியை அவர் கொன்றது தெரியவந்தது. சம்பவத்தன்று சின்ன பொண்ணுவிடம் ராஜப்பிரியன் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். ஆனால் மூதாட்டி பணம் தர மறுத்துள்ளார். மேலும் கொடுத்த தங்க கம்மலை மீட்க ெகாடுத்த பணத்தை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜப்பிரியன் அங்கிருந்த சொம்பை எடுத்து வீசி உள்ளார். அது சின்னப்பொண்ணு தலையில் பட்டு மயங்கி விழுந்து இறந்துள்ளார். பின்னர் அவரை தூக்கி அங்கிருந்த பெரிய அளவிலான மரப்பெட்டியில் போட்டுவிட்டு சென்றுள்ளார். இதனால் யாருக்கும் சம்பவம் குறித்து தெரிய வராமல் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை துர்நாற்றம் வீசவே அங்கு சென்று பார்த்தபோது, சின்னபொண்ணு உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது மகன் செல்வராஜ்(49) அளித்த புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார், ராஜப்பிரியன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: