புதுடெல்லி: ஆங்கில உச்சரிப்பில் (Tuticorin) இருக்கும் தூத்துக்குடி விமான நிலையத்தின் பெயரை தமிழ் உச்சரிப்பின் படி பெயர் மாற்றம் செய்யக் கோரி ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவிடம், ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சென்னை, கோவை, தூத்துக்குடி விமான நிலையங்களில் பெரிய அளவில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், திருச்சி மற்றும் மதுரை விமான நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஒன்றிய விமானப் போக்குரவத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை சந்தித்து, தமிழகத்தில் விமான நிலையங்களில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் விமான நிலைய பெயர் மாற்றத்திற்கான சில கோரிக்கைளை முன்வைத்தேன். அதன் வகையில், கோவை விமான நிலையத்தைப் பார்வையிட்டு, அங்கு நடைபெற்று வரும் விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைந்து செயல்படுத்த கோரிக்கை விடுத்ததுடன், சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு கூடுதலான வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டேன். மேலும், தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து பிற நகரங்களுக்கு விமான சேவையை விரிவுபடுத்துமாறு கேட்டுக் கொண்டதுடன், ‘Tuticorin’ என்ற பெயரினை, ‘தூத்துக்குடி விமான நிலையம்’ என்று மாற்றம் செய்வதற்கான கோரிக்கையையும் முன்வைத்தேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
