மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய பகுதிகளில் வனவிலங்குகள் தொடர் அட்டகாசம்

கூடலூர் : கூடலூர் அருகே காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் இதுபோன்ற தொடர் சம்பவங்களால் விவசாயிகள் மற்றும் மலையோர பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.தேனி மாட்டத்தில் கூடலூர், தேவாரம், பண்ணைபுரம், போடி மெட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய விளைநிலங்களுக்குள் காட்டு யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகளின் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவை விவசாய நிலங்களில் புகுந்து காய்கறிகளையும், அங்கு பயிரிட்டுள்ள பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் சில சமயங்களில் காட்டு மாடு, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அங்கு பணிபுரியும் விவசாய தொழிலாளர்களை தாக்கியும் விடுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்தால் விலங்குகளின் தொல்லையாலும் பெரும்பாலான விவசாயிகள், மலை காய்கறி விவசாயம் மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றனர். இதுபோன்ற சூழலில் சில விவசாயிகள் மலை விவசாயம் செய்தாலும் அதனை கடைசி வரை விலங்குகளிடமிருந்து காப்பது என்பது பெரும் சவாலாகவே உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான கூடலூர், தேவாரம், பண்ணைப்புரம், கோம்பை பகுதிகளில் உள்ளிட்ட பகுதிகளில் நெல்லி, மா, சப்போட்டா, தென்னை, வாழை உள்ளிட்ட சாகுபடி நடந்து வருகிறது. இந்நிலையில் கூடலூரை அடுத்துள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டி ஒத்தக்களம் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் நேற்று அதிகாலை புகுந்த காட்டு யானைகள் தோட்டத்தில் இருந்த வாழை மரங்களை சேதப்படுத்தின.

தொடர்ந்து ஏற்படும் இதுபோன்ற சம்பவங்களால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து மலைப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் யானைகள் சுற்றி வருவதால், மலைப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இப்பகுதியில் சுற்றித்திரியும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல், பகல்நேரத்திலேயே யானை, கரடிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. குறிப்பாக, ஒத்தையடி பாதையில் நடந்து செல்லும் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். காட்டுப்பன்றி, யானை, கரடி போன்ற வனவிலங்குகளிடம் இருந்து தப்பித்து செல்வதே பெரும்பாடாக உள்ளது.

விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்துவதால், பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. மேலும் மாலை 6 மணிக்கு மேல் மலைக்கிராமத்திற்கு பொதுமக்கள் யாரும் செல்வதில்லை. இதன் காரணமாக வீடுகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட சிரமமாக உள்ளது. எனவே, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்றனர்.

Related Stories: