இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க வேண்டும்: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்கவும், சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 27ம் தேதி(நேற்று முன்தினம்) மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று மீனவர்களை அவர்களது மீன்பிடிப் படகுடன் இலங்கை கடற்படையினர் 28ம் தேதி(நேற்று) கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்களும் அவர்களது மீன்பிடிப் படகுகளும் இலங்கை அதிகாரிகளால் சிறை பிடிக்கப்படுவது தங்கு தடையின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இக்கைது நடவடிக்கைகள் நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 248 மீன்பிடிப் படகுகளும், 61 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் காவலில் உள்ளனர். எனவே எதிர்காலத்தில் இது போன்ற கைது சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும், இலங்கை காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்கவும் உரிய தூதரக வழிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: