சேலம்: தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளராக இருப்பவர் ஆதவ் அர்ஜூனா. இவர் வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடுகிறார். இவர் தொடர்ந்து திமுக மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். நடிகர் விஜய்யின் பிரசாரத்திற்கான ஏற்பாடுகளை ஆதவ் அர்ஜூனா தான் செய்து வருகிறார். இவர் காட்டும் வழியை தான் நடிகர் விஜய்யும் பின்பற்றுகிறார்.
குறிப்பாக கரூர் பொதுக்கூட்டத்தின் போது போலீஸ் அதிகாரிகள் விஜய்யின் வாகனத்தை தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல வேண்டாம் வாகனத்தை இங்கே நிறுத்துங்கள், அதையும் தாண்டி சென்றால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என எடுத்து கூறினர். ஆனால் ஆதவ் அர்ஜூனா தான் நாங்கள் போலீசார் கூறுவதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். எந்த இடத்தில் எங்களது வாகனம் நிற்க வேண்டுமோ அங்கு தான் நிறுத்துவோம் என கூறி கூட்டத்தின் நடுவே வாகனத்தை கொண்டு சென்றனர்.
இதன் காரணமாக கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் இறந்துபோனதற்கு ஆதவ் ஆர்ஜூனா தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. நிலைமை மோசமான பிறகே அங்கேயிருந்து வாகனத்தை அப்புறப்படுத்தி சென்றனர். இடைப்பட்ட நேரத்தில் 41 பேர் பலியாகினர்.இதுதொடர்பாக சிபிஐ பதிவு செய்த எப்ஐஆரில் ஆதவ் அர்ஜூனா பெயரும் இடம் பெற்றுள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் அவர் சிபிஐயிடம் ஆஜராகியுள்ளார்.
தொடர்ந்து அவரிடம் சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். ஆதவ் அர்ஜூனா மீது குற்றம் இருப்பது உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நெருக்கடியின் காரணமாகவே அவர் திமுக மீது எதற்கெடுத்தாலும் பழி போட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்படி திமுக மீது தொடர்ந்து பழிபோடுவதன் மூலம் பாஜவின் கடைக்கண் பார்வை தன் மீது விழும் என்று அவர் நம்புகிறாராம். அதன் மூலம் கரூரில் விஜய் கூட்டத்தில் 41 பேர் பலியான வழக்கில் இருந்து தான் தப்பிக்கலாம் என்று நினைக்கிறாராம்.
