சென்னை: ஆம்னி உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு, மின்சார பேருந்துகளை ஊக்குவிக்கும் நோக்கில் வழங்கி வரும் சாலை வரி விலக்கு வரும் டிச.31ம் தேதி முடிவடைய உள்ள நிலையில் பொது போக்குவரத்தில் முக்கிய பங்காற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு 3 ஆண்டுகளுக்கு சாலை வரியில் இருந்து விலக்களிக்க வேண்டும்.
ஏனென்றால் தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்கள் சீனா போன்ற வெளிநாடுகளில் இருந்து மின்சாரப் பேருந்து சேஸ்களை வாங்கி இந்தியாவில் பாடி கட்டி பேருந்துகளை இயக்குகின்றனர். இது தவிர மற்ற எந்த நிறுவனங்களும் மின்சார ஆம்னி பேருந்துகளை இன்று வரை இயக்கவில்லை. நடைமுறை சிக்கல்களால், தனியார் ஆம்னி மின்சார பேருந்துகள் தமிழகத்தில் பெரிய அளவில் இயக்கப்படவில்லை.
ஆகையால், முதல்வர் மின்சார தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு குறைந்தது மூன்று ஆண்டுகள் சாலை வரி விலக்கும், மகாராஷ்டிரா மாநிலத்தைப் போல தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள மாநில அரசு டோல்கேட்டுகளில் மின்சார பேருந்துகளுக்கு டோல் கட்டண விலக்கும் வழங்கி, மாநிலம் முழுவதும் அதிவேக மின்சார பேருந்து சார்ஜிங் உள்கட்டமைப்பை விரைவாக உருவாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
