சென்னை: சட்டப் பேரவை தேர்தல் முன்னிட்டு அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை நியமனம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: 17வது சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக சார்பில், மக்களுக்கு பல்வேறு வகைகளில் நலம் பயக்கும் வகையிலான தேர்தல் அறிக்கையினை தயார் செய்வதற்காக, கழகத்தின் சார்பில் பின்வருமாறு குழு அமைக்கப்படுகிறது.
அதன்படி துணைப் பொதுச்செயலாளர், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் எம்.பி, செம்மலை, வளர்மதி, ஓ.எஸ்.மணியன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வைகைச்செல்வன் ஆகிய 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, பல்வேறு தரப்பட்ட மக்களின் கருத்துகளையும், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய தரவுகளையும் பெற்று வரும் வகையிலான சுற்றுப் பயணத் திட்டம் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
