புதுடெல்லி: ராணுவ வீரர்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கலாம் என தகவல்கள் வௌியாகி உள்ளன. அண்மையில் சமூக ஊடக கொள்கைகளில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களின்படி ராணுவ வீரர்கள் இன்ஸ்டாகிராம் என்ற சமூக ஊடகத்தில் கணக்கு தொடங்கி, பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் பதிவிடுதல், லைக் செய்வது அல்லது கருத்துகளை தெரிவிப்பது உள்ளிட்ட செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது, டிஜிட்டல் தகவல் யுகத்தில் ராணுவ வீரர்களின் விழிப்புணர்வை அதிகரிப்பது மற்றும் தவறான தகவல்களில் இருந்து தற்காத்து கொள்வது ஆகியவற்றை நோக்கமாக கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஏற்கனவே ராணுவ வீரர்கள் எக்ஸ் சமூக ஊடக தளத்தில் கணக்கு தொடங்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது முதன்முறையாக இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
