அரசியல் கட்சிகள் ரோட் ஷோ, கூட்டம் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் ஆட்சேபனைகளை பரிசீலித்து ஜன.5ம் தேதிக்குள் இறுதி முடிவு: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கரூர் துயர் சம்பவத்தை தொடர்ந்து அரசியல் கட்சிகள் ரோட் ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது தமிழக அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீது தங்களது பரிந்துரைகளை, ஆட்சேபனைகளை வழங்குமாறு அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய தலைமை அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் தங்களது பரிந்துரைகளை வழங்கிவிட்டதாக கூறினார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வழக்கறிஞர் அறிவழகன், தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.பி.சூரிய பிரகாசம் ஆகியோர் தங்களது பரிந்துரைகளை தாக்கல் செய்தனர். அப்போது, அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், அரசியல் கட்சிகள் அளித்துள்ள பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும் எனக் கூறினார். இதனையடுத்து, இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

இந்த நிலையில், நேற்று தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. தீர்ப்பில், பொதுக்கூட்டங்கள், டோட் ஷோக்களுகளுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதில் மனுதாரர்கள் தரப்பில் ஏராளமான ஆட்சேபனைகள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த ஆட்சேபனைகளை பரிசீலித்து வரும் ஜனவரி 5ம் தேதிக்குள் தமிழக அரசு இறுதி முடிவு எடுக்க வேண்டும். இதில் ஏதாவது பரிந்துரை மீது பிரச்னை இருந்தால் மனுதாரர்கள் குறிப்பிட்ட நிபந்தனையை எதிர்த்து தனியாக வழக்கு தொடரலாம் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

Related Stories: