சென்னை: வார இறுதி நாட்களையொட்டி 570 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளன. இதில் பயணிக்க இதுவரை 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘பண்டிகை காலம், முகூர்த்த தினம் மற்றும் வார விடுமுறை நாட்களில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள போக்குவரத்து கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 240 பேருந்துகளும், நாளை 255 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று மற்றும் நாளை 55 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மாதவரத்திலிருந்து இன்று மற்றும் நாளை 20 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க வழிவகை செய்யப்பட்டுள்ளன. தற்போது வரை இந்த வார விடுமுறைக்காக இன்று 7,708 பயணிகளும், நாளை 6,292 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 6,052 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இச்சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியை பயன்படுத்தி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
