கரூர், டிச.13: அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகைபெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியீட்டுள்ளனர். அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டம் கீழ்க்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மூலம் வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இளங்கலை (தொழிற்படிப்பு), முதுகலை, பாலிடெக்னிக் போன்ற பிற படிப்பு பயிலும் மாணவர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் முறை வரும் கல்வியாண்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு, மாணவ, மாணவியருக்கு கல்லூரி மூலம் வழங்கப்பட்டுள்ள எண் மூலம் https://umis.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித்தெகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி, https://umis.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேற்படி திட்டத்தின் கீழ் பயன்பெற மாணவர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் டிச.31ம் தேதி என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. கல்வி உதவித்தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை, அலுவலக நேரங்களில் அணுகி விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் என கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
