கிள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு ரூ.5.65 கோடியில் புதிய கட்டிடம்

*கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்

நாகர்கோவில் : குமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம், பைங்குளம் ஊராட்சிக்குட்பட்ட பைங்குளம், பனங்காலுமுக்கு, முக்காட்டுவிளை, பூச்சிக்காட்டுவிளை பகுதிகளிலும், கிள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:

முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம், பைங்குளம் ஊராட்சியில் 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் துணை சுகாதார வளாகத்தில் நடைபெற்றுவரும் கட்டுமான பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகளை விரைந்து முடித்திடவும், புதிய கட்டிடத்திற்கு மின் இணைப்பு வழங்கி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.45 லட்சம் மதிப்பில் பனங்காலுமுக்கு முதல் முக்காட்டுவிளை, பூச்சிக்காட்டுவிளை வரை 1300 மீ நீளத்திலும் 150 மிமீ தடிமத்திலும் சாலை அமைத்திடும் பணி நடைபெற்றுவருகிறது.

இப்பணியின் தரம் குறித்து செயற்பொறியாளரிடம் கேட்டறியப்பட்டதோடு, பணிகளை விரைந்து முடித்திட ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டது. பைங்குளம் ஊராட்சிக்குட்பட்ட முள்ளூர்துறை பகுதியில் சுனாமி வீடுகள் பழுது பார்த்தல் திட்டத்தின் கீழ் 24 வீடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் ஒரு வீட்டிற்கு பெரும் பழுதும், மீதமுள்ள 23 வீடுகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் சிறு பழுதும் பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு இத்திட்டத்தின் நோக்கம் மற்றும் பயன்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. கலைஞரின் கைவினைத்திட்டம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

தொகுக்கப்பட்ட ஒதுக்கீடு வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.5.65 கோடியில் நடைபெற்று வரும் கிள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலக புதிய கட்டட கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அஜிதா, ராஜகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: