சென்னை: டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழ்நாடு பாஜ மேலிட பொறுப்பாளரும், ஒன்றிய அமைச்சருமான பியூஸ் கோயல் உடனிருந்தார். இந்த சந்திப்பின் போது தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் தனக்கான தொகுதி பங்கீடு எவ்வளவு என்பது குறித்து டிடிவி.தினகரன் அமித்ஷாவிடம் விளக்கமாக எடுத்து கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அமித்ஷாவை சந்தித்துவிட்டு, டிடிவி.தினகரன் டெல்லியில் அளித்த பேட்டி:
அமித்ஷா மற்றும் பியூஸ் கோயல் ஆகியோரை சந்தித்து தேர்தல் பணிகள் மற்றும் அடுத்தகட்டமாக அதிமுக தலைமையிலான கூட்டணி எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற கருத்துகளை பரிமாறிக்கொண்டோம். தேசிய அளவில் பாஜ தலைமையில் கூட்டணி. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்குகிறது.
ஏன் டெல்லிக்கு வந்து பேச வேண்டும் என கேட்கிறீர்கள். ஒன்றிய உள்துறை அமைச்சர் ஒவ்வொரு முறையும் சென்னைக்கு வர முடியுமா? அதனால்தான் நாங்கள் இங்கு வந்து பேசுகிறோம். இன்றைய சந்திப்பில் தொகுதிப் பங்கீடு குறித்து எதுவும் பேசவில்லை. ஒன்றிய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு நிதி பெற்றுத் தர மாட்டீர்களா என்று கேட்கிறார்கள். தேர்தல் அறிவிப்பு வந்து தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த பின் எவ்வாறு நிதியை பெற்றுத் தர முடியும்?
இவ்வாறு டிடிவி.தினகரன் கூறினார்.
