சென்னை: 425 நடமாடும் மருத்துவமனைகளுடன் தேசிய அளவில் தமிழ்நாடு அரசு முதலிடம் பிடித்துள்ளது. ஒரு காலத்தில் நோயாளிகள் மருத்துவமனையை தேடி பல மைல் தூரம் நடந்து சென்றார்கள். ஆனால், அந்த நிலை மாறி, மருத்துவமே மக்களைத் தேடி அவர்கள் இல்லங்களுக்கே செல்லும் உன்னத திட்டம்தான் ‘மக்களைத் தேடி மருத்துவம்’. ஏழை, எளிய, விளிம்புநிலை மக்களின் உயிர்காக்கும் பொறுப்பை இந்த அரசு தனது தோள்களில் உறுதியாகச் சுமக்கும் என கடந்த 2021ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தைத் தொடங்கி வைத்தபோது, முதல்வர் மு.க.ஸ்டாலின் உதிர்த்த வார்த்தைகள் இவை. அன்று அவர் ஆற்றிய அந்த உரை, வெறும் மேடைப் பேச்சல்ல. அது தமிழ்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய மாபெரும் மக்கள் புரட்சி என்பதை, தற்போது ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஆணித்தரமாக நிரூபித்துக் காட்டியுள்ளன. இந்தியாவின் சுகாதாரக் கட்டமைப்பு குறித்து, ஒன்றிய அரசின் தேசிய சுகாதாரக் குழும மேலாண்மை தகவல் அமைப்பு, 2025ம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ தரவுகளை சமீபத்தில் வெளியிட்டது. அந்த தரவுகளின்படி, இந்தியாவிலேயே அதிக அளவிலான ‘நடமாடும் மருத்துவ வாகனங்களை’ இயக்கும் மாநிலங்களின் பட்டியலில், 425 வாகனங்களுடன் தமிழ்நாடு தேசிய அளவில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
மலைவாழ் குடியிருப்புகள், போக்குவரத்து வசதியற்ற குக்கிராமங்கள் மற்றும் படுக்கையிலேயே முடங்கிக் கிடக்கும் முதியோர்கள் என சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ள கடைக்கோடி மனிதனுக்கும் தரமான மருத்துவச் சேவையைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முதலமைச்சரின் கனவு இன்று 100% மெய்ப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த நடமாடும் மருத்துவ வாகனங்களில் 31 சதவீதத்தைத் (31%) தமிழ்நாடு மட்டுமே தனித்து இயக்கி வருவது, மாநில அரசின் மக்கள் பணிக்கு கிடைத்த மாபெரும் இமாலய வெற்றியாகும். அதாவது, இந்த ‘நடமாடும் மருத்துவமனைகள்’ வெறும் வாகனங்கள் அல்ல. அவை மருத்துவர்கள், செவிலியர்கள், பரிசோதனைக் கருவிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளுடன் ஏழை எளிய மக்களின் வீடு தேடிச் செல்லும் மருத்துவர்கள். இந்த திட்டத்தின் மூலம் சாமானிய மக்கள் ஏராள நன்மைகள் அடைந்துள்ளனர். முன்பு, சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகளை வாங்க, அன்றாடக் கூலித்தொழிலாளர்கள் தங்கள் ஒரு நாள் வேலையை விட்டுவிட்டு அரசு மருத்துவமனையில் மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டியதிருந்தது. இப்போது நடமாடும் மருத்துவக் குழுவினரே அவர்கள் வீடு தேடி வந்து மருந்துகளை வழங்குவதால், ஏழைகளின் அன்றாட வருமானம் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.
படுக்கையிலேயே முடங்கிக் கிடக்கும் முதியவர்கள், மருத்துவமனைக்குச் செல்ல முடியாத மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் இல்லங்களுக்கே சென்று பிசியோதெரபி (இயன்முறைச் சிகிச்சை) மற்றும் நோய் ஆதரவுச் சிகிச்சைகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. முறையான போக்குவரத்து வசதி இல்லாத குக்கிராமங்கள் மற்றும் மலைப்பகுதிகளுக்கு இந்த நடமாடும் மருத்துவமனைகள் நேரடியாகச் சென்று, பொதுமக்களுக்கு ரத்தப் பரிசோதனைகள், ஈசிஜி மற்றும் கர்ப்பிணிகளுக்கான மருத்துவ ஆலோசனைகளை வழங்கி தாய்-சேய் நலனை உறுதி செய்துள்ளன. ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு போன்ற தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்கள் மருத்துவமனைக்கு அலையாமல், வீடுகளிலேயே தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தடையின்றிப் பயனடைந்து வருகின்றனர். பிரமாண்டமான கட்டமைப்பைக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் பல பெரிய மாநிலங்கள், தமிழ்நாட்டின் இந்த மனிதநேயப் பணிக்கு ஈடுகொடுக்க முடியாமல் பல மைல் தூரம் பின்தங்கியுள்ளன என்பதை ஒன்றிய அரசின் தரவுகளே வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.
மக்கள் தொகையிலும், பரப்பளவிலும் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் வெறும் 170 வாகனங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. பல ஆண்டுகளாக ‘குஜராத் மாடல்’ எனப் புகழப்படும் குஜராத் மாநிலத்தில் வெறும் 74 வாகனங்கள் மட்டுமே சேவையில் உள்ளன. நாட்டின் வர்த்தகத் தலைநகரான மகாராஷ்டிராவோ வெறும் 20 வாகனங்களை மட்டுமே இயக்கி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. அடித்தட்டு மக்களுக்கான உயிர்காக்கும் மருத்துவச் சேவை என்பது சலுகையல்ல, அது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நிரூபித்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரம், தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற கொள்கை இந்தியாவிற்கே மிகச்சிறந்த வழிகாட்டி என்பதைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளது.
