திருவனந்தபுரத்தில் ஓட்டலில் வைத்து மலையாள டைரக்டர் மீது பலாத்காரம் முயற்சி வழக்கு

 

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் வரும் 12ம் தேதி கேரள சர்வதேச திரைப்பட விழா தொடங்குகிறது. இதற்காக ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி விருதுக் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. மலையாளப் படங்களுக்கான விருதுக் கமிட்டி தலைவராக பிரபல மலையாள சினிமா இயக்குனரும், முன்னாள் எம்எல்ஏவுமான பி.டி.குஞ்சு முகம்மது (76) உள்ளார்.

இந்தக் கமிட்டியில் ஒரு பெண் சினிமா கலைஞர் உள்பட 6 பேர் உள்ளனர். இந்நிலையில் படங்களை தேர்வு செய்வதற்கான ஒரு ஆலோசனைக் கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து நடைபெற்றது. அப்போது அந்தக் கூட்டத்திற்கு வந்த விருதுக் கமிட்டியை சேர்ந்த பெண் சினிமா கலைஞரை குஞ்சு முகம்மது ஓட்டல் அறையில் வைத்து பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் சினிமா கலைஞர் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் அளித்தார்.

டைரக்டர் குஞ்சு முகம்மது மீது திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். ஓட்டலில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பரிசோதித்தனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து டைரக்டர் குஞ்சு முகம்மது கூறியது: நான் அவமரியாதையாக நடந்து கொள்ளவில்லை. அவர் என்னை தவறாக புரிந்து கொண்டுவிட்டார். அவரிடம் மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறேன் என்றார்.

* 12 நாட்களுக்கு பின் வழக்குப் பதிவு

மலையாள இயக்குனர் பி.டி. குஞ்சு முகம்மதுக்கு எதிராக பெண் சினிமா கலைஞர் கடந்த நவம்பர் 27ம் தேதி கேரள முதல்வரின் அலுவலகத்தில் புகார் அளித்தார். ஆனால் இந்தப் புகார் உடனடியாக போலீசுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. 5 நாட்களுக்குப் பிறகு கடந்த 2ம் தேதி தான் புகார் திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் போலீசும் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால், மீண்டும் முதல்வர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு அவர் விவரத்தை கேட்டார். இதன்பிறகும் போலீசும் அந்தப் புகாரை கிடப்பில் போட்டது. இந்நிலையில் பலாத்கார முயற்சி விவரம் கசிய வாய்ப்பிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்ததால் வேறு வழியின்றி புகார் கொடுத்து 12 நாட்களுக்குப் பின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Related Stories: