கரூர், டிச. 9: மழைக்காலத்தில் பொதுமக்கள் ஈரமான கைகளால் மின் சாதனங்களை இயக்க வேண்டாம் என மின்வாரியம் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.மழைக்கால பராமரிப்பு குறித்து மின்வாரியம் சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சி செய்யக்கூடாது. வீட்டின் உட்புற சுவர் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்க கூடாது.வீடுகள் மற்றும் கட்டிடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும்.
நீரில் நனைந்த பேன், லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க கூடாது. மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் உபயோகிக்க கூடாது.வீட்டில் மின்சாரம் இல்லை என்றால் அருகில் இருந்து தாங்களாகவே ஒயர் மூலம் மின்சாரம் எடுக்க வேண்டாம். மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர் பாக்ஸ் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகளின் அருகில் செல்லக்கூடாது.
