சென்னை: சென்னையில் மழை குறைந்துள்ள நிலையில், அதிகாலையில் அதிகரிக்கும் பனியால் குளிர் காலம் தொடங்கியுள்ளது. மேலும், அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 16ம் தேதி தொடங்கி வெளுத்து வாங்கியது. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள், தென் மற்றும் வட மாவட்டங்கள் என அனைத்து பகுதிகளில் மழை பெய்தது. இதனால் ஒரு சில இடங்களில் நீர் நிலைகள் முழு கொள்ளளவை எட்டியது. ஆனால், நவம்பர் மாதத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாமல் வெப்பத்தின் தாக்கம் காணப்பட்டது. ஆனால் அந்த மாத இறுதியில் டிட்வா புயல் இலங்கையில் ருத்தரதாண்டவம் ஆடியதோடு தமிழகத்திலும் நுழைந்தது. இதனால் சென்னையில் தொடர்ந்து 4 நாட்கள் மழை வெளுத்து வாங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை குறைந்து பனி அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. எனவே, குளிர் காலம் தொடங்கியதாக கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்துள்ளது. பெரும்பாலான இடங்களில் மழை குறைந்துவிட்டது. அடுத்த ஒரு வாரத்திற்கு இதேபோன்ற நிலைதான் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதாவது, தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதே போன்று வரும் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வங்கக்கடல் பகுதிகளில் இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை முதல் வரும் 10ம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் மழை?: தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘அந்தமானை ஒட்டிய தென்கிழக்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இத்தாழ்வு நிலையுடன் இணைந்த ஈரபதம் மிகுந்த கீழைக்காற்று இலங்கை ஒட்டிய தென்மேற்கு வங்ககடல் பகுதி நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும். இதனால் 5ம் சுற்று வடகிழக்கு பருவமழை டிசம்பர் 9 முதல் 12 வரை பரவலாக பதிவாகும். இதை தொடர்ந்து, அடுத்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 15ம் தேதி உருவாகி, 5ம் சுற்று வடகிழக்கு பருவமழை டிசம்பர் 16 முதல் 20 வரையிலான காலக்கட்டத்தில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தீவிரமாகும். எனவே, டிசம்பர் மாதத்தில் உறுதியாக தமிழகத்தில் நல்ல மழை காத்திருக்கிறது’’ என்று கூறியுள்ளார்.
