திருமங்கலம், ஜன.13: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 20ம் தேதி திருமங்கலம் தொகுதி செக்காணூரணியில் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. நாளை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். இவர்கள் வருகையையொட்டி நேற்று திருமங்கலத்தை அடுத்த செக்காணூரணியில் மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன் தலைமையில் நடந்தது. இதில் வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி பேசுகையில், ‘‘திமுக தலைவர் ஸ்டாலின் 20ம் தேதி மக்கள் கிராம சபை நிறைவு கூட்டத்தை மதுரை தெற்கு மாவட்டத்தில் நடத்துகிறார். தொடர்ந்து முன்னாள் எம்பி அக்கினி ராஜ் படத்திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார். தேனியிலிருந்து உசிலம்பட்டி வழியாக செக்காணூரணி வரும் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க வேண்டும். இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகை தரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியிலும் ஆயிரக்கணக்கில் கட்சியினர் கலந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.