சென்னை: படைவீரர் கொடி நாள் நிதி வசூலில் சென்னை மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பிடித்தது. தமிழக மனிதவள மேலாண்மைத்துறை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமையில் நேற்று புனித ஜார்ஜ்கோட்டை வளாகத்தில் படைவீரர் கொடி நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
படைவீரர் கொடி நாள் நிதி வசூலுக்கு சென்னை மாவட்டம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 139.44 சதவீதம் நிதி வசூல் புரிந்து மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது. மேலும், இந்நிகழ்ச்சியில் தொகுப்பு நிதி மற்றும் தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து பல்வேறு நிதியுதவிகளாக 21 முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கு ரூ.3,51,028 வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, பொது (முன்னாள் படைவீரர்) துறை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறையின் இயக்குநர் கே.பாலசுப்பிரமணியம், அரசு பொதுத் துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர், தென் பிராந்திய இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஆ.எம்.ஸ்ரீனிவாஸ், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் ம.எட்வர்ட் ராஜ் , முன்னாள் படை அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள், அவர்தம் குடும்பத்தினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
