அரசியலில் இருந்து எடப்பாடியை விரட்ட வேண்டும்: ஓபிஎஸ் சபதம்

தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டியில் தமிழகம் தலைகுனியாது என்கிற தலைப்பில் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: 2021ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது பத்து தோல்வி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை முதலில் துவக்கினார். அப்போது செய்தியாளர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், ‘‘எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை துவக்கி விட்டாரே’’ என கேட்டனர்.

அதற்கு மு.க.ஸ்டாலின், ‘‘எடப்பாடி பிரசாரத்தை துவக்கிட்டாருல… அப்படினா திமுக பெரும் வெற்றி அடையும்’’ என்றார். சொன்னது போலவே திமுக மிகப் பெரும் வெற்றி அடைந்து ஐந்தாண்டுகள் சிறப்பான ஆட்சியை மக்களுக்கு அளித்து மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்து நிறைவேற்றி இருக்கிறது. சாத்தான்குளம் கொலை வழக்கில் தற்போது தீர்ப்பு வந்துள்ளது.

ஆனால், அந்தச் சம்பவம் நடந்தபோது ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி, ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமியை அரசியலில் இருந்து விரட்ட வேண்டுமென நாம் சபதம் எடுக்க வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 234 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும். எதிர்த்து போட்டியிடக்கூடிய கட்சியினரை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார்.

Related Stories: